tamilnadu

img

ஹிஜாப் அணிவது அரசமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை- பிரின்ஸ் கஜேந்திரபாபு

ஹிஜாப் அணிவது அரசமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை என கூறியுள்ளார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

இதுகுறித்து அவர் கூறியுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

ஹிஜாப் என்பது சீருடை கிடையாது.‌ அனைவரும் அணிய வேண்டியப் பள்ளிச் சீருடையை மாணவிகள் அணிகிறார்கள்.

அவர்களின் நம்பிக்கை அடிப்படையில் சீருடையின் மேல் அணியும் ஆடையே ஹிஜாப்.

தங்களின் பண்பாட்டின் கூறான மறை நம்பிக்கையின் அடிப்படையில் ஆடைகள் அணிவது இந்தியர்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமை.

இந்த அடிப்படை உரிமையை பள்ளி நிர்வாகத்தாலோ, அரசினாலோ  மறுக்க முடியாது.

அணியும் ஆடை நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை தாண்டி வேறு எந்த நிபந்தனையும் விதிக்க இயலாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக இருக்கக் கூடியவர், மதச்சார்பற்ற  அரசிற்கு தலைமை தாங்குகிறார்.

அத்தகைய முதல் அமைச்சர் ஆய்வு செய்ய, விழாக்களில் பங்கேற்க பள்ளிகளுக்கு செல்கிறார். மாணவர்களுடன் உரையாடுகிறார்.

அத்தகைய அரசமைப்புச் சட்டப் பொறுப்பை (Constitutional Authority) வகிக்கும் ஒருவர் தான் நம்பிக்கை கொண்ட, தான் பின்பற்றும் மறையின் நம்பிக்கை அடிப்படையில் ஆடை அணிய‌ அவருக்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது.

அரசமைப்புச் சட்டம் அனைத்து இந்தியர்களையும் சமமாக பார்க்கிறது. மறை நம்பிக்கையின் அடிப்படையில் ஆடை அணிய முதல் அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு அரசமைப்புச் சட்டம் தரும் அதே உரிமை சாமான்ய இந்தியர்களுக்கும் தரப்பட்டுள்ளது. என அதில் அவர் கூறியுள்ளார்.