அந்நிய ஆட்சியின் அடிமைத்தளைகளை அறுத்தெறிந்து இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நாளில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாட்டின் விடுதலையை சாத்தியமாக்க இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு இந்த 73வது விடுதலைத் திருநாளில் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது இலக்குகள், இலட்சியங்களை நிறைவேற்ற சூளுரைப்போம்.
விடுதலைப் போராட்டத்தின் விளைச்சலாக இந்திய மண்ணில் பொதுவுடமை இயக்கம் உருவானது. அந்த மகத்தான இயக்கத்தின் நூற்றாண்டு விழா எதிர்வரும் அக்டோபர் 17ஆம் தேதி துவங்குகிறது. ‘பூரண விடுதலையேதேசத்தின் இலட்சியம்’ என்ற முழக்கத்தை முதன் முதலாக எழுப்பியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்ற வரலாற்று உண்மையை இந்த நாளில் நினைவு கொள்வோம்.
விடுதலைப் பெற்ற இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களும், பண்பாட்டு விழுமியங்களும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், மொழி வழி மாகாணங்கள் அமைய வேண்டும் என்ற தீர்வைமுன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆனால் இன்றைக்கு தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்தொழிக்கும் வேலையில் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி அரசு மூர்க்கமாகஇறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியே அரசியல் சாசனத்தில் ஜம்மு - காஷ்மீருக்கான 370வது பிரிவை ரத்து செய்து, அந்த மாநிலத்தையே இல்லாமல் செய்து யூனியன் பிரதேசங்களாக சிதறடித்துள்ள செயலாகும்.
அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்ட மைய அரசு, பெயரளவுக்கான மாநில அரசு என்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டம். அதை சிரமேற்கொண்டு மத்திய பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றி வருகிறது. அனைத்து முனைகளிலும் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு மத்தியில் குவிக்கப்படுகிறது. இன்றைக்கு ஜம்மு- காஷ்மீருக்கு ஏற்பட்ட கதி நாளை எந்த ஒரு மாநிலத்திற்கும் ஏற்படக்கூடும். இந்தியாவின் கூட்டாட்சித்தன்மை பாதுகாக்கப்படுகிற பொழுதுதான் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியும் என்ற உணர்வோடு இந்த சதியை முறியடித்தாக வேண்டும்.
தேசிய விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியாக அனைவருக்கும் கல்வி என்ற முழக்கம் எழுந்தது. நாடு விடுதலை பெற்ற பிறகும் கடைக்கோடி இந்தியருக்கும் கல்வியை கொண்டு சேர்க்கும் பணி முழுமை பெறவில்லை. ஆனால்
தற்போது மோடி அரசு செயல்படுத்த முனையும் புதியக் கல்விக்கொள்கை நாட்டில் மீண்டும் குலக்கல்வி முறையை புகுத்தி, கல்லாதவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வகை செய்கிறது. இந்தி மற்றும் சமஸ்கிருதமொழியை
வம்படியாக திணிக்க முயல்வதன் மூலம் அனைத்துப் பகுதி மக்களின் சமச்சீரான தாய்மொழிகளின் வளர்ச்சிக்கு தடைக்கற்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாக, மதரீதியான பிளவை அதிகரிக்கச் செய்வதாக, குடிமக்களின் குடிமை சார்உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளது. மறுபுறத்தில் கார்ப்பரேட் கனவான்களுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தேசத்தின் அனைத்து கதவுகளையும் திறந்துவிடும் பணி நடக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களைமுற்றாக அழித்துவிட முனைகின்றனர். தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை கார்ப்பரேட்டுகளின் காலடியில் காணிக்கையாக்குகிற ஆட்சியாளர்களை எதிர்த்து இந்திய தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் என அனைத்துப் பகுதியினரையும் இணைத்துக் கொண்டு மாபெரும் போராட்டங்களை எதிர்வரும் காலத்தில் இன்னும் வலிமையாக நடத்தும் என்பது திண்ணம். விடுதலை போராட்டத்தின் பகுதியாகஉருவாக்கப்பட்ட சுதேசி, சுயசார்பு போன்ற விழுமியங்கள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன.
இந்திய பொருளாதாரம் தள்ளாடி தடுமாறி நிற்பதை மறைக்க மக்களை சாதிய ரீதியாகவும், மத ரீதியாகவும் மோத விட முயல்கின்றனர். இதை முறியடித்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பும், வாழ்வாதாரமும் கேடு கெட்ட
கொள்கைகளால் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் போதுதான் அந்த வார்த்தை முழுஅர்த்தம் பெறும். ‘இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்’ என்று அடிமை இந்தியாவில் இருந்ததை போன்று, பல்வேறு சட்டத்திருத்தங்கள் மூலம் கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாகும்.
பாஜகவின் தயவுடன் தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசு நாளுக்கு நாள் மோடி ஆட்சியின் பினாமி போலவே மாறி வருகிறது. தமிழக உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படும் போது, வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டுமின்றி அவை அனைத்தையும் நியாயப்படுத்துகிற, துணை நிற்கிற அளவுக்கு துணிந்து விட்டது மாநில அரசு. இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதமான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி ஆகிய மாண்புகளையும், மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை போன்ற நம் தேசத்தின் உள்ளார்ந்த மரபுகளையும் உயர்த்திப்பிடிக்க பெற்ற சுதந்திரத்தை பேணிப் பாதுகாத்திட இந்த நாளில் உறுதி கொள்வோம்.