tamilnadu

img

கிராமசபை கூட்டம்... கனிமொழி உட்பட 300 பேர் மீது வழக்கு பதிவு..

சென்னை:
கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்‌.

தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் அக்.2-ல் நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், கொரோனா பரவலின் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்வதாக திடீரென அறிவித்தது.இந்த நிலையில், அனைத்து ஊராட்சிகளிலும் மக்களை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் தி.மு.க சார்பில் கிராமசபை கூட்டம் நடத்த அக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, பல்வேறு இடங்களிலும் திமுக சார்பில் தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே அரசூர் ஊராட்சி இடைச்சிவிளையில் நடத்தப்பட்ட பொது மக்கள் சபைக் கூட்டத்தில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, திருச்செந்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று மனுக்களைப் பெற்றனர்.இதையடுத்து, அனுமதியின்றி கிராம சபைக்கூட்டம் நடத்தியதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, திருச்செந்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், அரசூர் ஊராட்சி தலைவர் தினேஷ் ராஜசிங் மற்றும் சாத்தான்குளம் திமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட 300 பேர் மீது தட்டார்மடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.