சென்னை:
நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில், தொலைநிலைக் கல்வி தேர்வுக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகம் சந்தித்துவரும் கடும் நிதி நெருக்கடியினால் பல்வேறு பாதிப்புகளைச் சந்திப்பதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிதி நெருக்கடியினால் சுமார் 200 பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும், 7ஆவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையிலான ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத்தொகைகள் வழங்கப்பட வில்லை என்றும், ஓய்வு பெற்றவர் களுக்கான பலன்கள் வழங்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.200 கோடி வரையிலான பற்றாக்குறை யில் பல்கலைக்கழகம் இயங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.இந்த நிலையில் நிதி நெருக்கடி யைச் சமாளிக்கும் வகையில் கல்விக்கட்டணத்தை உயர்த்த முடிவெடுக்கப் பட்டது. இதற்கு அரசு ஒப்புதல் தராததை அடுத்து, தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணத்தை உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக இளநிலை படிப்புகளுக்கான தேர்வுத்தாள் கட்டணம் ரூ.60இல் இருந்து ரூ.120ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. எம்பிஏ படிப்புக்கான தேர்வுக் கட்டணமானது ரூ.400இல் இருந்து ரூ.500 ஆகவும், எம்எஸ்சி ஐடி தேர்வுத்தாள் கட்டணம் ரூ.175இல் இருந்து ரூ.360ஆகவும், பிஎட் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் ரூ.100இல் இருந்து ரூ.360ஆகவும், பிற முதுநிலைப் படிப்புகளுக்கான கட்டணம் ரூ.200இல் இருந்து ரூ.300 ஆகவும், செய்முறைத் திட்டங்களுக்கான கட்டணம் ரூ.120இல் இருந்து ரூ.150 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த தேர்வுக் கட்டணம் பிற பல்கலைக் கழகங்களுடன் ஒப்பிடுகையில் குறைவானது என்று சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார். “பல்கலைக் கழகத்தில் நடைபெறும் ஆட்சிக் குழுவில் இந்த கட்டண உயர்வுக்கு அனுமதி பெறப்படவுள்ளது. அதன்பின் இந்த பரிந்துரை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.