சிதம்பரம், நவ. 10- ஆளுநர் மாளிகை முன்பு நவ.26,27,28 தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி தெரிவித்துள்ளது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமை வகித்தார். விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலாளர் பசுமை வளவன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங் கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பெ.சண்முகம் கூறுகை யில், “ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத நடவடிக்கை களை கண்டித்து தில்லி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ள 30 ஆளுநர் மாளிகை முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின், ஐக்கிய விவசாயி முன்னணி சங்கங்கள் தலை மையில் அனைத்து விவசாய சங்கங்க ளும், தொழிலாளர்களும் இணைந்து மிகப்பெரிய தொடர் போராட்டங்களை நடத்த போவதாக அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் நவ. 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் தமிழ் நாடு ஆளுநர் மாளிகை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்”என்றார். இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு காவல்துறையிடம் முறையான அனுமதி கேட்டுள் ளோம். 3 நாட்களும் பகல் மற்றும் இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இந்த போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் வருகை தருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, வாச்சாத்தி வழக்கில் தொடர்ந்து போராடி வரலாற்று வெற்றி பெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகத்துக்கு விவசாய சங்க தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.