பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய தொழில்நுட்ப படிப்புகள் உள்ளன. இதற்கான 2024-25 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 983 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதில், ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 570 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 68 மாணவர்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. விருப்பமுள்ள மாணவர்கள், www.tneonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 12-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வருகிற 12 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. அதற்கு தகுதி பெற்ற மாணவர்களின் விவரங்கள், www.tneonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.