tamilnadu

img

அரசின் கவனத்தை ஈர்க்க 1000 இடங்களில் ஆர்ப்பாட்டம் .... அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு....

சென்னை:
தமிழக அரசு வெள்ளியன்று (ஆக. 13) தாக்கல் செய்த நிதி அறிக்கையில் அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் திங்களன்று (ஆக. 16) மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை வெள்ளியன்று (ஆக. 13) வெளியிடப் பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கான அறிவிப்புகள் அறிவித்ததை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வரவேற்கிறது.தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 5 லட்சமாக உயர்த்தி அறிவித்ததையும், அதேபோல் மகளிர் அரசு ஊழியருக்கு 12 மாதகாலம் மகப்பேறு விடுப்பு வழங்கியதையும் வரவேற்கிறோம். திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள கீழ்க்காணும் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு ஏதும் இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய பயனளிப்பு ஓய்வூதியம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், எம்ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக வரன்முறைப் படுத்தப்படும், கொரோனாவை காரணம் காட்டி 27 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப் படி அறிவிக்காதது, அரசு துறைகளில் காலியாக உள்ள நான்கரை லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்த எந்தவிதமான அறிவிப்பும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படாதது அரசு ஊழியர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழக முதலமைச்சர் எங்களுடைய கோரிக்கையினை நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்களன்று (ஆக. 16) தமிழகம் முழுவதும் ஆயிரம்இடங்களில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும்வகையில் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடர்முடிவதற்குள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

;