எல்ஐசி இணையதளத்தில் இந்தி திணிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-இன் இணையதளம் முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்த பயனர்கள், எல்.ஐ.சி-இன் ஆன்லைன் சேவையை பயன்படுத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எல்.ஐ.சி இணையத்தளத்தில் ஆங்கில மொழியை தேர்வு செய்திடும் விருப்பத்தையும் இந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எல்ஐசி இணையதளத்தில் இந்தி திணிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"இந்தி திணிப்பின் பிரச்சார கருவியாக எல்ஐசி இணையதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கில மொழியை தேர்வு செய்யும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது.
இந்தியாவின் பன்முகத்தன்மையை நசுக்கும் வகையில், ஒற்றை கலாச்சாரமும், மொழியும் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. அனைத்து இந்தியர்களின் பங்களிப்புடன் வளர்ந்த எல்.ஐ.சி, எந்த தைரியத்தில் இப்படி பெரும்பான்மை இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கிறது? இந்த மொழியியல் கொடுங்கோன்மையை திரும்ப பெற வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.