குழந்தைகளை கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள்
கடலூர், செப். 27- கடலூர் வட்டம் கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி சாய்பாபு (43). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் இறந்து விடவே மாமனார் சீனுவாசன் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு கோஜன் (7), கோகுல் (6) ஆகிய மகன்கள் உள்ளனர். குழந்தைகளை வளர்க்கவும், கல்விக்காகவும் சாய்பாபு ஏராளமானவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். அதனை திருப்பிச் செலுத்த முடியாததால் சுப்பிரமணியபுரத்திற்கு இடம் மாறியுள்ளார். ஆனாலும், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரவே கடந்த 17-7-2017 அன்று அருகிலுள்ள திம்மராவுத்தன் குப்பத்திலுள்ள நாத்தனார் பழனியம்மாள் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். சம்பவத்தன்று, தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வருவதாகக் கூறிச் சென்றவர் அருகிலுள்ள கிணற்றில் இரண்டு குழந்தைகளையும் தூக்கி வீசியுள்ளார். பின்னர், தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கோடு கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதற்குள் அருகிலிருந்தவர்கள் பார்த்து மீட்டனர். ஆனால் குழந்தைகள் இறந்துவிட்டன. சிகிச்சைக்குப் பின்னர் சாய்பாபு உயிர் பிழைத்தார். இதுகுறித்து குள்ளச்சாவடி காவல்துறையினர வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.மகாலட்சுமி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இரண்டு குழந்தைகளை கொன்ற சாய்பாபுவிற்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
தடுப்புக்காவலில் இளைஞர்கள் கைது
கடலூர், செப். 27- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திருவிக நகரைச் சேர்ந்தவர் சிவகுமார் மனைவி ரத்னா. கடந்த ஆண்டில் சிவக்குமார் கொலையான நிலையில், இவ்வழக்கில் வெங்கடேசன் மகன் அருணா (34) கைது செய்யப்பட்டார். அண்மையில் பிணையில் வெளியே வந்த இவர், கடந்த மாதம் 29 ஆம் தேதி ரத்னாவை தனக்கு எதிராக சாட்சி சொல்லக் கூடாதென மிரட்டியுள்ளார். இதுகுறித்து, ரத்னா கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் ஷாகுல்ஹமீது வழக்குப் பதிந்து அருணாவை கைது செய்தார். குமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் மகன் ராபின்குமார் (26). கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறி செய்த வழக்கில் புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். தொடர் விசாரணையில் அவர் மீது குமரி மாவட்டத்தில் ரவுடி பதிவேட்டில் இவர் பெயர் இருப்பது தெரிய வந்தது. எனவே, இந்த இருவரையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தார். அதன்பேரில் ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், ஓராண்டிற்கு சிறையில் அடைக்க உத்திரவிட்டார். அதனைத் தொடர்ந்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திறன்சார்ந்த கல்விமுறை மிக அவசியம்
காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பேச்சு
சின்னாளபட்டி,செப். 27- திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை சார்பில் திறன் மேம்பாடு என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கின் தொடக்க விழா வியாழக்கிழமையன்று தொடங்கியது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (பொறுப்பு) முனைவர் எம்.சுந்தரவடிவேலு தலைமையுரையில், அனைத்துப் பணிகளுக்கும் திறன் மிகவும் அவசியமானதாகும். திறன் அடிப்படையில் முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. இங்கு அனைத்து துறைகளிலும் திறன் சார்ந்த கல்வி முறை ஊக்குவிக்கப்படுகிறது. அதேபோல காந்திகிராம பல்கலைக் கழகத்திலும் திறன் சார்ந்த கல்விகளான மோட்டார் வாகன பழுது நீக்கும் பயிற்சி, ஆடை வடிவமைப்பு, உணவு தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதல், கால்நடை வளர்ப்பு தொடர்பான பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகள் பல்வேறு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனுடன் திறன் சார்ந்த பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றது என்று தெரிவித்தார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எஸ்.பார்த்தசாரதி, சமூக அறிவியல் புலத்தலைவர் முனைவர் எஸ்.குருசாமி ஆகியோர் பேசினர். இவ்விழாவில் கல்வியியல் துறைத்தலைவர் முனைவர் எ.ஜகிதாபேகம் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் பி.எஸ்.ஸ்ரீதேவி நன்றி கூறினார்.
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
திருவில்லிபுத்தூர், செப்.27- மனைவியை வெட்டி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் செபஸ்தியான் (45) இவரது மனைவி மோட்சம் (35) இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் செபஸ்தியான் மனைவியை வெட்டி கொலை செய்தார். இந்தச் சம்பவம் 2010-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7-ஆம் தேதி நடைபெற்றது. இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா மனைவியை கொலை செய்த செபஸ்தியானுக்கு ஆயுள் தண்டனையும் ஐந்தா யிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
விபத்தில் கூலி தொழிலாளி பலி
நத்தம்,செப்.27- திண்டுக்கல்மாவட்டம், நத்தம் செந்துறை அருகே குரும்ப பட்டியைச் சேர்ந்தவர் ஜோதிக்குமார்(32). கூலித் தொழிலாளி யான இவர் கடந்த 20 ஆம் தேதியன்று செந்துறைக்கு வந்து விட்டு இருசக்கர வாகனத்தில் குரும்பபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் ஜோதிக்குமார் வந்த வாகனத்தில் மோதியதில் பலத்த காய மடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந் தார். இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் ராஜமுரளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.