சிபிஎம் முயற்சியால் தனி ரேஷன் கடை திறப்பு
திருவண்ணாமலை, ஜுலை 28- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கோழிப்புலியூர் ஊராட்சி மாணிக்கமங்கலம் பகுதி மக்களுக்கு, தனியாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்பது கிராம மக்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் ஜா.வே.சிவராமன், விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் பிரபாகரன், குப்புசாமி ஆகியோர் வலியுறுத்தினர். மேலும் தனியாக ரேஷன் கடை அமைக்காவிட்டால் மக்களை திரட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று மாணிக்கமங்கலம் பகுதியில் மக்களால் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக கட்டிடத்தில், ரேஷன் கடை திறக்கப்பட்டு, பொருட்களும் விநியோகிக்கப்பட்டது. கிராம மக்களின் நலனுக்காக செயல்பட்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கும், விவசாயிகள் சங்கத்திற்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
விவசாய நிலத்தில் மலைப்பாம்பு
வேலூர், ஜூலை 28- வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (65). அதே பகுதி யில் அவருக்கு சொந்தமான இடத்தில் கால்நடை தீவனங்களை அறுவடை செய்ய பணியாட்களுடன் சென்றார். அப்போது, ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு சென்றதை பார்த்து அலறியடித்து ஓடினர். பின்னர் மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின் பொது மக்கள் உதவியோடு பாம்பை பிடித்து வனத்துறை யிடம் ஒப்படைத்தனர்.