ஆம்பூர் நவம்பர் 20. ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 5 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை வாழ்த்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் பா. அருள் சீனிவாசன் பேசுகையில்," ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய அளவு மழையின்மையினாலும் , கரும்பு கிரயத் தொகை சரியான நேரத்தில் நிர்வாகம் வழங்காததாலும் சாகுபடி பரப்பளவு படிப்படியாக குறைந்து விட்டது. மேலும் , உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரைக்கு விலை அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் உறுப்பினர்கள் கரும்பு சாகுபடியை குறைத்து வருகின்றனர் . ஆனால் , தற்போது இவ்வாலை பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டிலேயே வேலூர் மாவட்டத்தில்தான் கணிசமான அளவு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தற்போது கரும்பு சாகுபடிக்கு ஏற்ற நிலை உள்ளது. ஏற்கனவே கடும் வறட்சியினால் கரும்பு சாகுபடி குறைந்து தற்போது 2019 - 20 ஆம் ஆண்டு பருவத்திற்கு சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டன்கள் கரும்பு கிடைக்கும் நிலையில் உள்ளது. இத்துடன் இவ்வாலையில் பதிவு செய்யாத கரும்பை ஆலைக்கு பதிவு செய்தும், சகோதர ஆலைகளிலிருந்து சிறிதளவு கரும்பை பெற்றும் ஆலையின் அரவைத் தொடர்ந்து நல்ல முறையில் இயக்கிட இயலும். ஆனால் தற்போது ஆட்சியாளர்கள் கரும்பு சாகுபடி குறைவாக உள்ளதை காரணம் காட்டி , இவ்வாலையில் பதிவு செய்யப்பட்ட கரும்பை இதே நிலைமையில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்ப நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றனர் . இதனால் இவ்வாலை பணியாளர்கள் மற்றும் அங்கத்தினர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். 2019 - 20 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு பதிவு செய்த கரும்பை வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பவ தால், இவ்வாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அங்கத்தினர்கள் வாழ்வாதாரம் வரும் காலங்களில் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் அரவையை ஒரு வருடம் நிறுத்தி மீண்டும் அரவை செய்ய தொடங்குவதற்குள் இயந்திரங்கள் பழுதாகிவிடும். எனவே ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்கிடவும், தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்ககவேண்டும் என்றார் அவர். இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் சி.ஐ.டி.யு ராஜ்குமார், ஏ.ஐ.டி.யு.சி மனோகரன், எல்.பி.எப் சாமி செல்லதுரை, ஐ.என்.டி.யு.சி ஐயப்பன், ஏ.டி.பி. ரமேஷ், ஸ்டாப் யூனியன் கணேஷ், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் கே.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.