ஆம்பூர்,ஜூலை 14 ஓடும் ரயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த அவர் சனிக்கிழமை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டுச் சென்றார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் அருகே இரவு 12.30 மணிக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த உமாதேவி கழிவறைக்குச் செல்ல எழுந்தார். தூக்க கலக்கத்தில் இருந்த அவர் ரயிலில் கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறை கதவு என நினைத்து வாசல் கதவை திறந்து விட்டார். இதில் கால் தடுமாறிய அவர் வாசலில் இருந்து தவறி கீழே விழுந்தார். முதுகு, கால்களில் படுகாயம் அடைந்த அவர் தண்ட வாளத்தின் அருகில் எழுந்திருக்க முடியாமல் கிடந்தார். காப்பாற்றுமாறு கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். ஞாயிறன்று (ஜூலை 14) காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உமாதேவி படுகாயமடைந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுபற்றி ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 108 அவசர ஊர்தி மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆம்பூர் வந்தனர். உமாதேவியை வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உமாதேவி அதிகம் நகை அணிந்திருந்தார். நள்ளிரவு 12.30 மணிமுதல் காலை வரை தண்டவாளத்தின் அருகில் கிடந்தாலும் அவரது நகை பத்திர மாக இருந்தன. காயமடைந்து மயங்கி கிடந்த பெண்ணை நகைகளுடன் பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த பொது மக்களுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.