மதுராந்தகம், மே 18-மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கேட்டு மனுகொடுக்கச் சென்ற மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் மற்றும் வட்டக்குழு உறுப்பினரை தரக்குறைவாகப் பேசிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டச் செயலாளர் கே.வாசுதேவன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு வருமாறு:-மதுராந்தகம் வட்டம் தண்டலம் கிராமத்திற்குட்பட்ட சேனியர்மேடு இருளர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை கேட்டு கடந்த 14ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் கே.வாசுதேவன், வட்டக்குழு உறுப்பினர் அர்ஜூன்குமார் ஆகியோர் வட்டாட்சியரை சந்திக்க சென்றோம்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத் திறனாளி உதவித்தொகை, உபகரணங்கள் வழங்கும் கூட்டத்தில் இருளர் சமுகத்தைச் சார்ந்த அமரேசன் என்பவரின் மனு பெறப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வுகளை முடிக்காமலேயே காலம் தாழ்த்திவருகின்றனர். இதுகுறித்து சிறப்புத் திட்ட வட்டாட்சியர் பர்வதத்திடம் முறையிட்ட போது மீண்டும் மனு கொடுங்கள் எனக் கூறியிருந்தார்வட்டாட்சியர் கூறியது போலக் கடந்த 14ம் தேதி இருளர் சமுகத்தைச்சேர்ந்த அமரேசன், ராஜி ஆகிய இருவரின் மனுவையும் வட்டாட்சியர் பர்வதத்திடம் கொடுத்தோம். அமரேசனின் மனுவைப் படித்து விட்டு மாவட்ட மறுவாழ்வு மையத்திற்கு போக வேண்டும் எனக் கூறினார். ராஜியின் மனுவை படித்துவிட்டு சில குறைகளைக் கூறினார். அதற்கு நாங்கள் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்ஆய்வாளர் ஆய்வுக்கு வரும்போதுஅந்த குறைகளை பார்க்கட்டும் என்றோம். உடனே வட்டாட்சியர் கோபமாக எழுந்து தரக்குறைவாகப் பேசினார். மேலும் திமிரா அதிகாரத்துடன் நடந்துகொண்டார்.அப்போ, நீங்கள் பதில் சொல்லாமல் கோபப்படலாமா எனக் கேட்டதற்கு, ‘செருப்பால் அடிப்பேன்’ என கூறினார். உதவி செய்ய வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை அவமானம் படுத்திய வட்டாட்சியர் பர்வதம் மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.