tamilnadu

img

செய்கிற உதவிக்கு ஒன்றிய அரசு பணம் கேட்கக் கூடாது

2018 வெள்ளப் பெருக்கின் போது விமானப்படை செலவு, உதவிய அரிசி ஆகியவற்றுக்காக கேரள அரசிடம் பணம் கேட்டதைப் போல இப்போது ஒன்றிய அரசு கேட்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமைகள் குறித்து மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதம் நடைபெற்றது. அப்போது டாக்டர் ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது:

நான் இந்த விவாதத்தில் ஆழ்ந்த வருத்தத்துடன் பங்கேற்கிறேன். வயநாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவின் பரிமாணத்தைக் கருத்தில் கொண்டு இதனை ‘தேசியப் பேரிடர்’ என அறிவித்திட வேண்டியது அவசியமாகும்.

மோசமான நிலச்சரிவு

மாண்புமிகு உறுப்பினர் ஒருவர், இதனை தேசியப் பேரிடர் என அறிவிக்க எந்த விதிகளும்  இல்லை (no provision) என்று கூறியிருக்கிறார்.  மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் ஏற்பட்டுள்ள பேரழிவின் அளவினைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான நிலச்சரிவு இதுவாகும். கேரள அரசாங்கம், ஒன்றிய அரசாங்கத்தின் முகமைகளுடன் இணைந்து,  மக்களுக்கு நிவாரணம் அளித்திட சாத்தியமான அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறது.

 மக்களுக்கு உதவி செய்வதில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு என அந்த மூன்று கட்டங்களில் இப்போது ‘மீட்பு’ நடவடிக்கைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறோம். இன்னும் பலரைக் காணவில்லை. சிலரது சடலங்கள் அண்டை மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, பேரழிவின் பருண்மை மிகப்பெரியதாகும். எனவே, மீட்பு நடவடிக்கைகளை உத்தரவாதப்படுத்திட அனைத்துவிதமான சாதனங்களையும் முடுக்கிவிட  வேண்டிய நிலையில் இருக்கிறோம். மீட்பு நடவடிக்கை களின் எல்லை என்பது வயநாடு மாவட்டத்தைத் தாண்டியும் சென்றுகொண்டிருக்கிறது. எனவே, கேரள அரசின் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒன்றிய அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்திடவேண்டும்.

60 விழுக்காடு நிலச்சரிவுகள் கேரளாவில்

சென்ற  ஏழு ஆண்டுகளில் நாட்டில் 3,782 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றில் 2,289 நிலச்சரிவுகள் கேரளாவில் மட்டும் ஏற்பட்டுள்ளன. அதாவது நிலச்சரிவுகளில் சுமார் 60 விழுக்காடு கேரளாவில்  மட்டும் ஏற்பட்டுள்ளன. வயநாடில் 45 நிவாரண முகாம்கள் அமைத்திருக்கிறோம்.  முகாம்களில் சுமார் 4 ஆயிரம் பேர் தங்க வைக்கப் பட்டிருக்கிறார்கள். பல்வேறு முகமைகளும், மக்களும் தங்கள் கட்சிமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு நிவாரணம் அளித்திட முன்வந்திருக்கிறார்கள். வயநாடில் மட்டும் இரண்டு தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தீயணைப்புப் படை, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவல்துறை ஆகிய அனைத்து அமைப்புகளும் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஒன்றிய அரசுக்கு நன்றி

மேலும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையும் உதவி அளித்துக் கொண்டிருப்பதற்காக ஒன்றிய அரசாங்கத்திற்கு என்னுடைய பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை 163 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.   இந்த எண்ணிக்கை, நான் முன்பே கூறியதுபோன்று மேலும் உயர்ந்திடும் என்றே கருதுகிறேன். 250 பேர் இன்னமும் கிடைக்கவில்லை. புதைசேற்றுக்குள்ளிருந்து சடலங்களை வெளியே எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. 2018இல் கேரள மாநிலத்தில் மிகவும் மோசமான முறையில் வெள்ளம் ஏற்பட்டது. அது இந்த நூற்றாண்டிலேயே மிகவும் மோசமான வெள்ளப் பெருக்காகும். அந்த சமயத்தில் விமானப் படையினர் செலவு செய்த தொகையையும், அரிசி அளித்ததற்கான தொகையையும் ஒன்றிய அரசாங்கம் கேரள அரசாங்கத்திடம் கோரியது. அதைப்போன்று இப்போது கேட்கக் கூடாது என்று உள்துறை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இது நாட்டின் பேரிடர் எனக் கருதிட வேண்டும்  என்றும், உங்கள் ஆதரவுக் கரத்தை நீட்டுங்கள் என்றும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜான் பிரிட்டாஸ் பேசினார்.