கந்தர்சஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிய சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை விமர்சிக்கும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இதற்கு சங்க பரிவார அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் கைது செய்யப்பட்டார். அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சுரேந்திரனை தமிழகத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணைக்கு நடத்தினர். பின்னர் ராயபுரத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இல்லத்தில் சுரேந்தர் ஆஜர் படுத்தப்பட்டார். சுரேந்தரை வரும் 30 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் அடைக்க கடந்த 17 ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் நபிகள் நாயகம் குறித்து இழிவான முறையில் பேசிய இந்து தமிழர் பேரவையின் கோபால் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கு ஜாமீன் பெற முடியாது