சென்னை,ஏப்.3- வீட்டுமனை வியாபாரிகள், மத நிறுவனங்கள் பயனடையும் முறையில் மலைப்பகுதிகளை அழித்து, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையிலான தமிழக அரசாணையை அமல்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் மிகப்பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் அரசாணை ஒன்றை கடந்த 30.3.2020 அன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முழுவதும் மலைப்பகுதிகளைப் பாதுகாப்பதற்கென்று மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பு ( (Hill Area Conservation Authority - HACA) என்ற அமைப்பு 1990 Mம் ஆண்டு அமைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காடுகள் மற்றும் காட்டுக்கு அருகில் உள்ள பகுதிகள் இந்த அமைப்பின் பொறுப்பில் விடப்பட்டிருந்தன. இந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் அப்பகுதியிலுள்ள நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு எடுக்க முடியாது. ஆனால் தற்போது தமிழக அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் சார்பில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி “மலைப்பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் மற்றும் வீட்டுமனைகளை அங்கீகரிப்பதற்கான விதிகள் 2020” என்ற பெயரில் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதுவும் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 20-க்கு முன்பு நிலம் வாங்கியவர்கள், வீட்டுமனை வியாபாரம் செய்பவர்கள், கட்டுமான தொழில்புரிபவர்கள் பயனடையும் வகையில் முன்தேதியிட்டு இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நிலம் வாங்கிய ஏழைகள் மற்றும் அப்பாவிகளின் துயர்துடைப்பதற்காக என்று முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் பெரிதும் பலனடையப் போகிறவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள வியாபாரிகளே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மலைப்பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள், விவசாயம் செய்து வருபவர்களுக்கு பட்டா வழங்க தடைவிதித்து அரசாணை எண்.1168 – 1989 ஆம் ஆண்டு போடப்பட்டு இன்று வரை அது நடைமுறையில் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஆதிவாசி மக்கள் பரம்பரையாக அங்கு வாழ்ந்த போதும் பட்டா கிடைக்கப் பெறாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. ஆனால், தற்போது மலைப்பகுதிகளை அழிக்கும் வகையிலும்,சுற்றுசூழலைப் பாதிக்கும் வகையிலும், ஈஷா, காரூண்யா, அமிர்தானந்தமயி போன்ற பெரும் மத நிறுவனங்கள் பலனடையும் வகையிலும் விதிகளை உருவாக்கி இருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து எப்படி மீள்வது என்று செயலாற்றிக் கொண்டிருக்கும் போது அவசரமாக இப்படியொரு அரசாணை வெளியிட வேண்டிய அவசியமென்ன? என்ற கேள்வி எழுகிறது. இது என்ன அவ்வளவு, அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை என்று அரசு கருதுகிறதா? எந்தவொரு மக்கள் பிரதிநிதிகளிடமும் ஆலோசிக்காமல் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்திட வேண்டும். நிலைமைகள் சீரான பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காடுகளின் மீது அக்கறைகொண்ட அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டு முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.