tamilnadu

எதிர்க்கட்சிகள் சிதறியதே மோடி வெற்றிக்கு காரணம் தொல். திருமாவளவன் அறிக்கை

சென்னை, மே 24-மக்களவை பொதுத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சியமைக்கவிருக்கிறார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:இப்படியொருநிலை நடந்துவிடக் கூடாதே  என்பதுதான் அனைத்து ஜனநாயக சக்திகளின் பெரும் கவலையாக இருந்தது. எனினும், வகுப்புவாத சக்திகளை எதிர்த்துச் செயல்படும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேசிய அளவில் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திப்பதற்கான சூழல் அமையவில்லை. இதனால் பாஜகவுக்கு எதிரான வாக்கு வங்கி மானாவாரியாகச் சிதறிவிட்டது. இந்த நிலைமைதான், மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக தலைமையிலான சங்பரிவார் கும்பலுக்கு அரும்பெரும் வாய்ப்பாக அமைந்து மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் வலுவாகப் பாடம் புகட்டியுள்ளனர். திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ளனர். இந்தமண் பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண். எனவே,இங்கே சாதி-மதவெறி சக்திகளுக்கு துணைநிற்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. பணமதிப்பு அழிப்பு, நீட், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் ஆலை போன்றவற்றை எதிர்த்து மோடிக்கு எதிராக திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாகப் போராடியதன் விளைவாக இங்கே மோடி எதிர்ப்புஅலை படிப்படியாகக் கட்டமைக்கபட்டது. மேலும், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகிய சிறுபான்மையினரின் மோடி எதிர்ப்பும் இங்கே வலுவாக வேரூன்றியிருந்தது. இத்தகைய சூழல்தான் பாஜக- அதிமுக கூட்டணியைக் குப்புற வீழ்த்தியுள்ளது.சிதம்பரம்  தொகுதியைப் பொருத்தவரையில், அனைத்துத் தரப்பு வாக்காளப் பொதுமக்களும் எனக்களித்த வெற்றியின்மூலம், எனக்கெதிராக சாதி-மதவெறி சக்திகள் திட்டமிட்டு பரப்பிய அவதூறுகளையெல்லாம் முறியடித்துள்ளனர். எனவே,இந்த வெற்றியை தொகுதி மக்கள் அனைவருக்கும் காணிக்கையாக்கு கிறேன். புதுச்சேரி உட்பட தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு வரலாறு காணாத வகையில் பெருவெற்றியை வழங்கிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மீண்டும் சனாதன சக்திகளின் கைகளில் சிக்கிக் கொண்ட இந்த தேசத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்திடும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் மக்களவையில் பணியாற்றுவோம் என வெற்றிச் சூளுரையாக உறுதியளிக்கிறேன்.