tamilnadu

img

மத - சாதிவெறி கொண்டோரின் எண்ணம் நிறைவேறாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை, டிச. 6 - தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத் தொடக்க விழா, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர், நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: “பட்டியலின மக்களுக்காக தனியாக தொடங்கப்பட்ட திட்டம்தான் ‘அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம்’. ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.

திமுக அரசு பழங்குடியினருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் அயோத்திதாசர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மழை- வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதில் திமுக அரசுக்கு வரும் நல்ல பெயருக்கு தூய்மை பணியாளர்கள் முக்கியக் காரணம். மின்வாரிய ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் நேரம் பார்க்காமல் பணியாற்றுவதன் மூலமே மழை வெள்ளத்தை சிறப்பாக எதிர்கொள்ள முடிகிறது. தூய்மை பணியாளர்கள் என்று சொல்வதைவிட தூயஉள்ளம் கொண்ட பணியாளர்கள் என்று கூறலாம்.  

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே திமுக அரசின் இலக்கு. தமிழ்நாட்டில் மதவெறியை பரப்புவோரின் திட்டங்கள் ஒருபோதும் எடுபடாது. மதவெறி, சாதி வெறி கொண்டவர்களின் எண்ணம், இந்த பெரியார், அம்பேத்கரின் மண்ணில் இந்த ஸ்டாலின் இருக்கும் வரை  ஒருபோதும் நிறைவேறாது” என்று கூறியுள்ளார். இவ்வாறு முதல்வர் கூறினார்.