சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஜூன் 6 வியாழனன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தேர்தலில் எனக்காக பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர்மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மக்களவை உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் விருப்ப மொழி தொடர்பான முதலமைச்சரின் ட்விட்டர் பதிவு குறித்து பேசிய அவர், “கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மும்மொழிக் கொள்கை என்றால் என்னவென்றே புரிந்திருக்காது. அவ்வளவு பெரிய அறிவாளிகள் இவர்கள். முதல்வர் ட்விட்டரில்பதிவிட்டு பின்னர் அதனை நீக்கியது தவறானது. ஆளத் தகுதியற்றவர்கள் இவர்கள் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்று விமர்சித்தார்.