சென்னை:
பள்ளிகள் திறப்பை பொங்கல் வரை தள்ளிவைக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் சங்க நிறுவனத்தலைவர் அ.மாயவன், முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:-
தமிழகத்தில் பள்ளிகளை 16 ஆம் தேதி முதல் திறக்கலாமா? என்பதை பற்றி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பெற்றோரின் கருத்துகளை அறிந்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சரை பாராட்டி மகிழ்கிறோம்.கொரோனாவின் கொடூர தாக்குதல் இன்னும் குறைந்தபாடில்லை. எதிர்வருகின்ற காலம் கடுமையான மழை காலமும், குளிர்காலமும் ஆகும். கொரோனாவுக்கு இந்த காலநிலைமை மிகவும் கொண்டாட் டம். மேலும் அவை பல்கிப்பெருக உகந்த நல்ல வாய்ப்பாக அமையும். கொரோனா தொற்று குறைந்துவரும் நாடுகளில் கூட மீண்டும் கொரோனா விசுவரூபம் எடுத்து அதன் ஆட்டத்தை தொடங்கிவிட்டது.எனவே தமிழ்நாட்டில் பள்ளிகளை 16 ஆம் தேதி அன்று திறக்கப்படுவதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து பள்ளிகள் திறக்கப்படுவதை வரும் பொங்கல் திருநாள் வரை தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.