தமிழ்நாடு முழுவதும் பணி நிரந்தரம் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இன்று (பிப்.16) மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
மின் உற்பத்தி, மின் விநியோகம், விரி வாக்க பணிகள், பொது கட்டுமான வட்டம் ஆகிய இடங்களில் சுமார் 12 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு பணி நிரந்தரம் செய்ய மின்வாரிய நிர்வாகம் மறுத்து வருகிறது.
மின் உற்பத்தி, பராமரிப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்த முறையை புகுத்தக்கூடாது என அரசாணையை வெளியிட்டுவிட்டு அதனை மீறி அரசு செயல்படுகிறது. ஒப்பந்த முறை ஒழிப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை ஆட்சியாளர்கள் மதிப்பதில்லை. அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது.
திமுக ஆட்சியில் அமர்ந்து 20 மாதங்கள் கடந்த பின்னரும் கூட ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.
சென்னை தெற்கு கிளை சார்பில் கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் இ.விஜயலட்சுமி, தெற்கு கிளை செயலாளர்கள் பண்டாரம் பிள்ளை, கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.