காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு விடுக்கப்படும் மிரட்டல்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஜார்க்டவுன் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு குறித்து பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜகவினர் மற்றும் சிவ சேனை கட்சியின் ஷிண்டே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் உள்ளிட்டோர் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"தனது பாட்டிக்கு நேர்ந்த கதியை ராகுல்காந்தி சந்திக்க நேரிடும் என பாஜக தலைவரின் மிரட்டல்; அவரது நாக்கை அறுப்பவர்களுக்கு ஷிண்டே சேனா எம்.எல்.ஏ சன்மானம் அறிவிப்பு போன்ற ஊடகங்களில் வரும் மிரட்டல்கள், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனது சகோதரர் ராகுல் காந்திக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பது, சிலரை நிலைகுலைய வைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு விரைந்து செயல்பட்டு, மிரட்டல்களுக்கும், வன்முறைக்கும் நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.