tamilnadu

img

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தவறுகளை திருத்தம் செய்துகொள்ள வாய்ப்பு  

குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது விபரங்களை தவறாக உள்ளீட்டு செய்தவர்கள் அதனை திருத்தம் செய்துகொள்ள டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்பம் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது மார்ச் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் அதில் விவரங்களை தவறாக உள்ளீடு செய்திருந்தால், வருகிற 14 ஆம் தேதிமுதல் மார்ச் 23 ஆம் தேதிவரை திருத்தம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  

1.இணையவழி விண்ணப்பத்தில் உள்ள தகவல்களில், ஒருசில தகவல்கள் தேர்வரின் ஒருமுறை நிரந்தர பதிவில் இருந்து முன்கொணரப்பட்டவை. அவ்வாறான தகவல்களைத் திருத்தம் செய்வதற்கு முதலில் தனது ஒருமுறை நிரந்தர பதிவில் எடிட் ப்ரோஃபைல்ல் சென்று உரிய திருத்தங்களை செய்து அவற்றை சேமிக்கவும்.  

2.அதன்பிறகு விண்ணப்பத்திற்கு எதிரே உள்ள எடிட்டில் சென்று விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பும் விவரங்களை திருத்தம் செய்து, இறுதியாக சேமித்து, அதனை சமர்ப்பித்து அதற்குரிய நகலினை அச்சுப்பிரதி எடுத்து கொள்ளவும்.  

3.விண்ணப்பத்தில் திருத்தம் செய்தபிறகு, திருத்தப்பட்ட விவரங்களை இறுதியாக சேமித்து சமர்ப்பிக்கவில்லையென்றால், தேர்வர் இதற்கு முன்பு சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.  

4.திருத்தம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில், தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், உரிய தேர்வுக் கட்டணத்தை இணைய வழியாக செலுத்தவும். உரிய தேர்வுக் கட்டணத்தை ஏற்கனவே செலுத்திய தேர்வர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.  

இதுதொடர்பான சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in மற்றும் grievance.tnpsc@tn.gov.in என்ற முகவரிகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என்று இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

;