tamilnadu

img

தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும்: பள்ளிக்கல்வித்துறை  

தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நீண்ட காலமாக அமலிலுள்ள இருமொழி கொள்கையை மாற்றி மும்மொழி கொள்கையைப் புகட்டும் நடவடிக்கைகள் சத்தம் இன்றி தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதற்கு மறுப்பு தெரிவித்து தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். தாய் மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழி கொள்கை மட்டுமே வழக்கத்திலிருந்து வருகிறது.  

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்மொழி கற்கும் சட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாய பாடமாக கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.    

தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மாணவர்கள், தமிழுடன் தாய்மொழியை விருப்பப்பாடமாக தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதை பள்ளிக்கல்வித்துறை தெளிவுப்படுத்தியுள்ளது.

மேலும், மொழிப்பாடக்கொள்கை குறித்த உண்மைக்கு புறம்பாக தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம்.

எனவே தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ள மொழிக்கொள்கையின் அடிப்படையில் இருமொழி கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.   

;