தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் தெரிவித்துள்ளது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பால் கலப்படம் குறித்து மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, தமிழகம், கேரளா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை உள்ளதாகவும், நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாலில் காஸ்டிக்சோடா, பிளீச்சிங் பவுடர், தண்ணீர் போன்ற பொருட்கள் கலக்கப்படுவதாக தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு சார்பில் பால் கலப்படத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட வில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.