tamilnadu

img

கேரளத்திற்கு உதவிக்கரம் நீட்டும் தமிழகம்

அதிமுக - எஸ்ஆர்எம் பல்கலை. தலா ரூ. 1 கோடி நிதி உதவி!

சென்னை, ஆக. 1 - கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள அதிகன மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சுமார் 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பலரைக் காணவில்லை. ஆயிரக்கணக்கானோர் உடமைகளை இழந்து நிற்கின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு துணை நிற்குமாறு, அனைத்துத் தரப்பினருக்கும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் விடுத்த வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனிடையே, நிலச்சரிவு துயரம் நிகழ்ந்த உடனேயே, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 கோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும்; மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும், என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பாரிவேந்தர்

கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர், கேரள முதல்வரை சந்தித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் ரூ. 1 கோடி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் ரூ.25லட்சம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.

சூர்யா குடும்பத்தினர் ரூ. 50 லட்சம்

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவும் விதமாக நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ. 50 லட்சத்தை கேரள  முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்காக வழங்கி யுள்ளனர்.

விக்ரம் ரூ. 20 லட்சம்

முன்னதாக நிலச்சரிவு நிகழ்ந்த உடனேயே, முதல் நபராக திரைக் கலைஞர் விக்ரம் ரூ. 20 லட்சம் நிதியுதவியை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கி யது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் வியாழனன்று மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வயநாடு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் பல்வேறு பகுதிகளில் உண்டியல் ஏந்தி நிதி வசூலில் ஈடுபட்டனர்.