tamilnadu

img

சட்ட விரோத தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக.... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:
தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தார்.இந்த வழக்கு அக்டோபர் 7 அன்று மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள் அளித்த விண்ணப்பங்கள் மீது எடுத்த முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்தனர். அதில், குடிநீர் ஆலைகள் இயங்க அனுமதிக்க முடியாத பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 396 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மீண்டும் தடையில்லா சான்று வழங்க முடியாது. அதேசமயம், குடிநீர் ஆலைகள் இயங்கஅனுமதிக்கக்கூடிய  பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 690 நிறுவனங்களில் 510 செயல்பட தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள் 15சதவீதத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டுமென்ற உத்தரவை 143நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தியுள்ளன. மீதமுள்ள 367 நிறுவங்கள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றும் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்காதநிறுவனங்களை மேற்கொண்டு செயல்பட அனுமதிக்க வேண்டியதில்லை. உடனடியாக மூட உத்தரவிடலாம். நிலத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளைவை கணக்கிடும் ப்ளோமீட்டர்  (Flow meter)எனும் கருவியைபொருத்துவதற்கு கட்டணம் நிர்ணயிக்க அரசு ஏன் கொள்கை முடிவெடுக்கவில்லை என்று அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மனுதாரர் சிவமுத்து தரப்பில், சென்னையில் மட்டும் விதிகளை மீறி அதிகளவில் தண்ணீர் எடுத்து வரும் 40 நிறுவனங்களின் பட்டியலை தாக்கல் செய்தார்.இதையடுத்து, இதே போன்று தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து 4 வாரங்களுக்கு அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.உரிமம் பெறாமலும் புதுப்பிக்காமலும் இயங்கி வந்த தண்ணீர் நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கிய சலுகையை திரும்பப்பெற்று கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.