மாணவி டி.தாரா 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 462 மதிப்பெண்கள்
திருவள்ளூர், மே 16- திருக்கண்டலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி டி.தாரா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 462 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெகுவாக பாராட்டினர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், திருக்கண்டலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 83 மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 70 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருக்கண்டலம் கிராமத்தை சேர்ந்த இ.தாமோதரன்-ரம்யா மூத்த மகள் டி. தாரா 462 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடம் பிடித்தார். ஜான்சி 447 மதிப்பெண்கள் பெற்று 2ஆம்இடம் பிடித்தார். என்.பிரியதர்சினி 443 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ஹாமினி, உதவி தலைமை ஆசிரியர் எழிலரசி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டி.கே.ராமச்சந்திரன், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பெ.ரவி, எஸ்எம்சி குழு தலைவர் ஸ்ரீமதி, மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் பாராட்டி னர். பள்ளி அளவில் முதல் இடம் பிடித்த தாராவின் தகப்பனார் தாமோதரன் என்பவர் நோய் வாய் ஏற்பட்டு திடீரென கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.