கள்ளக்குறிச்சி, ஜூன்.11 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருவில் குழந்தைகளின் பாலினம் கண்டறிவர்கள் மற்றும் கருக்கலைப்பில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர்ஷ்ரவன் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் கிராமத்தில் இயங்கி வரும் சரவணா மெடிக்கல் கிளினிக் மற்றும் லேப் சென்டரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நலப்பணிகள் (பொ) மருத்துவர் செந்தில்குமார் தலைமை யில் கொண்ட குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் போது கிளினிக் நடத்தி வரும் சரவணன் என்பவர் போதிய மருத்துவ கல்வி பயிலாமல் டிப்ளமோ ஐடிஐ யை முடித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்ததும் சோதனையின் போது மூன்று நபர்களுக்கு மருத்துவர் ஆலோசனையின்றி குளுக்கோஸ் (IV Fluids drips) ஏற்றப்பட்டிருந்தது.
மருத்துவரின்றி மருத்துவம் பார்ப்பது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். மேலும் காலாவதியான மருந்துகளை சரவணா மெடிக்கல் கிளினிக்கில் இருப்பு வைத்துள்ளனர். இம் மருத்துவப் பொருட்களை சரவணா மெடிக்கல் பெயரில் வாங்கப்பட்டுள்ளதும் இம்மருந்துகள் அனைத்தும் மருத்துவக் குழுக்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி சரவணன் என்பவர் மீது மருத்துவ சட்டப்படி தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு காவல்துறையின் மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பது, கருவில் குழந்தைகளின் பாலினம் கண்டறிவது, கருக்கலைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரி வித்துள்ளார்.