tamilnadu

img

பட்டினியால் வாடும் ஐஐடி கட்டுமானப் பணி தொழிலாளர்கள்

சென்னை:
ஐஐடி கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டடப் பணிகளில் ஈடுபட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் கூலியை அளிக்காததால் பட்டினியில் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை ஐஐடியில் தொடர்ந்து உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளுக்காக பெரும்பாலும் வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொழிலாளர்களுக்குத் தங்கும் இடத்துடன் குறைந்த அளவில் கூலி தருவதால் ஒப்பந்த நிறுவனங்கள் அவர்களைப் பணிக்கு அமர்த்தி வேலை வாங்குகின்றன.

மத்திய அரசு ஊரடங்கு அறிவிக்கும் போது, தொழிலாளர்களுக்கு வேலையின்றி இருந்தாலும் உரிய ஊதியத்தினை தரவேண்டுமென அறிவித்துள்ளது. ஆனால், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை ஐஐடி மண்டகினி ஆண்கள் விடுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்க ளுக்கு மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து சம்பளம் வழங்கப்படவில்லை.மேலும், அவர்களுக்கு ஒரு கோடியே 70 லட்சம் சம்பளப் பாக்கி உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கு காலத்திலும் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.

வட மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரியும் 550-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் டிஇசி கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் மத்திய அரசின் பொதுப்பணித் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் நடைபெற்று வருகிறது.அதுமட்டுமின்றி, ஊரடங்கு காலத்தின் பொழுது தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காகத் தமிழ்நாடு அரசு வழங்கிய அரிசி பருப்பு, எண்ணெய் போன்றவற்றை ஒப்பந்ததாரர் வழங்காமல் பதுக்கி வைத்துள்ளார். மேலும், தொழிலாளர்கள் ஊரடங்கு முடிந்தபின் மீண்டும் வேலைக்கு வந்தால் மட்டுமே சம்பளம் தரப்படும் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, ஐஐடி மாணவர்கள் எடுத்த முயற்சியால் கடந்த 10 நாள்களில் தொழிலாளர்களுக்கு உணவிற்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐஐடி நிர்வாகம் கூறியது. ஆனால், அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.கட்டுமானப் பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் கூலியைத் தராவிட்டால் ஐஐடி மெட்ராஸ், மத்திய அரசின் பொதுப் பணித்துறை ஆகியவை நேரடியாக விநியோகம் செய்யலாம் எனக்கூறப் பட்டுள்ளது.மேலும், தொழிலாளர்கள் வசிக்கக்கூடிய இடம் மிகவும் மோசமாக உள்ளது. ஐஐடி நிர்வாகம் தலையிட்டு ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் எனத் தொழிலாளர் மாணவர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

;