tamilnadu

சாதிய வன்மத்துடன் அவதூறு பரப்பும் சேனலை தடைசெய்ய கோரிக்கை

 சென்னை,டிச.6- சாதிய வன்மத்துடன் குறவன் இன மக்கள் மீது அவதூறு பரப்பும் தனியார் யூடியூப் சேனலை தடை செய்து அதன் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.வி.சண்முகம்  விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு: அண்மையில்‘THE KTv’ என்ற யூடியூப் சேனலில் குறவன் இனம் குறித்து அவதூறான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நடந்த கொலை மற்றும் கொள்ளை  சம்பவம் குறித்து போலீசார் பல முனைகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்  போலீசார் யாரையும் கைது செய்வதற்கு முன்பாக The KTV  என்ற யூடியூப் சேனலில்  கார்த்திக் என்பவர் இந்த கொலை கொள்ளைச் சம்பவத்தில் குறவர்கள்தான் ஈடுபட்டிருப்பார்கள் என்று இவராகவே குறிப்பிட்ட ஒரு இனத்தின் மீது அவதூறு பரப்புவதை வண்மையான கண்டிக்கிறோம்.

மேலும்,  சாராயக் குறவர் என்றும்  திருட்டு குறவர்கள் என்றும் குறவன் இனத்தை இழிவுபடுத்தி பேசுவது சாதிய வன்மம் ஆகும். தமிழ்நாட்டின் மூத்த தொல்குடி சமூகம் குறவன் சமூகத்தினர்.

ஆனால், இந்த சம்பவத்தை குறவர்களான இவர்கள்தான் செய்திருப்பார்கள்; செய்வார்கள் என்று தனது யூடியூப் சேனலில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். எனவே, தமிழக அரசு தலையிட்டு The KTV கார்த்திக் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறை தண்டனை வழங்க வேண்டும். குறவன் இனத்தின் மீது சாதிய வன்மத்துடன்  அவதூறு பரப்பி இதர மக்களோடு மக்களாக வாழ முடியாத நிலையை உருவாக்கிய The KTV  யூடியூப் சேனல் நிருபர் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.