tamilnadu

வகுப்புவாத சக்திகளை முறியடித்து சோனியா வெற்றி பெறுவார் கே.எஸ். அழகிரி வாழ்த்து

சென்னை,ஆக.11  வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் தேசியத் தலை வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சோனியாவிற்கு, மாநில காங்கிரஸ் தலைவர்  அழகிரி வாழ்த்து தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மீண்டும் சோனியா காந்தி நியமிக்கப்பட்டி ருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன். மிகமிகச் சோதனையான காலகட்டத்தில் 1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 19 ஆண்டுகாலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்து, காங்கிரஸ் கட்சியை வலிமையுடன் வழிநடத்தியவர். இவரது தலைமையின் கீழ் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பத்தாண்டு காலம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை வழி நடத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதில் பெரும் துணையாக இருந்தவர். கடந்த காலத்தில் இவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி பல வெற்றிகளை குவித்தது. அதைப் போல, மீண்டும் சோனியா காந்தி அவர்களின் தலைமையில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து, வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.