சென்னை, டிச. 5 - தமிழகத்தில் மின்சார மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றும் திட்டத்தின் முதல் ஒப்பந்தத்தை அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஸ்மார்ட் மீட்டர்கள் மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில், ஒப்பந்தம் கோரியிருந்த நிறுவனங்களில் அதானி குழும நிறுவனம்தான் மிகக் குறைந்தத் தொகைக்கு ஒப்பந்தம் கோரி யிருப்பதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் திட்ட செயலாக்கத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டைத்தான் தங்களின் முக்கிய இலக்காக ொண்டிருப்பதாக, அதானி எனர்ஜி நிறுவனத்தின் அறிக்கைகள் தெரிவிக் கின்றன.
இதற்கு மிக முக்கிய காரணம், தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மீட்டர்களை நிறுவ வாய்ப்பிருப்பதும், ஒன்றிய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத்துறை திட்டத்தின் கீழ் இந்த திட்டத்துக்கு ரூ. 19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதும் தான் என்று கூறப்படுகிறது.
ஒப்பந்தங்களுக்கான மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான தகவலின்படி, நிதி ஏலத் தொடக்க நிலையில் உள்ள இந்த திட்டத்தின் முதல் தொகுப்பை அதானி எனர்ஜி நிறுவனம் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கோரிய எல்1 ஏலதாரராக இருக்கிறது. எனினும், தமிழக அரசுத் தரப்பில் அதானி குழுமத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.