விம்கோ நகர் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்திடுக சிறுகடை விற்பனையாளர் சங்கம் கோரிக்கை
சென்னை, ஜூன் 7- சாலையோர சிறுகடை விற்பனையாளர் சங்கத்தின் விம்கோ நகர் மார்க்கெட் 2ஆம் ஆண்டு பேரவை கூட்டம் தலைவர் கே.கபூர் தலைமையில் நடைபெற்றது. ஜெ.அன்பு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் என்.ஜெகதீசன் வேலை அறிக்கையையும், பொருளாளர் அல்லி ராணி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். நகர விற்பனைக் குழு உறுப்பினர்கள் எஸ்.கோபாலகிருஷ்ணன், ஜி.மோனிஷா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் பேரவையை நிறைவு செய்து பேசினார். கலியமூர்த்தி நன்றி கூறினார். தீர்மானங்கள் விம்கோ நகர் மார்க்கெட் பகுதியை விற்பனை மண்டலமாக அறிவிக்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும், அத்தியாவசிய தேவைக்காக சாலையோர கடைகளை அப்புறப்படுத்தும் போது, மாற்று இடம் வழங்கி விட்டு அப்புறப்படுத்த வேண்டும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், வியாபாரம் செய்யும் அனைவருக்கும் மாநகராட்சி தள்ளு வண்டிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, நிர்வாகிகள் தேர்வு கவுரத் தலைவராக ஜெ.அன்பு, தலைவராக கே.கபூர், செயலாளராக என்.ஜெகதீசன், பொருளாளராக அல்லி ராணி உள்ளிட்ட 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.