சென்னை, மே 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சென்னையில் இன்று (மே 16) தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப்பேசினார்.
அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப்பொதுச் செயலாளர் அ.ராசா எம்பி, செய்திதொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் சீத்தாராம்யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காகச் செல்கிறேன். இதற்காக சென்னை வந்த நான் மரியாதை நிமித்தமாக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக அரசை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் தோழமை கட்சியாக உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட்ட பின்னர் எழுந்துள்ள அரசியல் நிலைமைகள் குறித்து விவாதித்தோம். பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்தாண்டு இறுதிக்குள் சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத்தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து அடுத்தடுத்த நாட்களில் இக்கட்சிகளிடையே தீவிரமான ஆலோசனை நடைபெறவுள்ளது.
பாஜகவுக்கு எதிராகத் தேசிய அளவில் அணிச்சேர்க்கை நிச்சயம் உருவாகும். அதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளிடையே தொடங்கிவிட்டது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று விரும்பும் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளிடையே ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துச் செயல்படுவது குறித்தும் பேச்சுக்கள் தொடங்கியுள்ளது.
பாஜகவை வீழ்த்துவது மட்டுமல்ல இன்று மிக முக்கியமானது இந்தியாவை பாதுகாப்பது ஆகும். இந்திய அரசமைப்பு சட்டம். ஜனநாயகம், மக்களின் சிவில் உரிமைகள் ஆகியவற்றை பாதுகாத்து இப்போது இருப்பதை விடச் சிறந்ததொரு இந்தியாவை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். அதற்கு மதவாத சக்திகள் வீழ்த்தப்படவேண்டும்.
மாநிலத்திற்கு மாநிலம் குறிப்பிட்ட சில பிரச்சனைகள் இருந்தாலும் நிலைமைகளுக்குத் தகுந்தவாறு முடிவுகளை எடுப்போம். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் அனைத்து மதச் சார்பற்ற எதிர்க்கட்சிகளும் ஓரணியின் கீழ் வந்துள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ் தனித்து நின்றபோதிலும் பாஜகவை வீழ்த்துவதில் வெற்றிபெற்றுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தனித்தனியாகத் தேர்தலைச் சந்தித்தபோதிலும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் பார்த்துக்கொண்டன. எனவே ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு பாஜகவை வீழ்த்துவதற்கான உக்திகள் வகுக்கப்படும்.
அரசமைப்பு சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்களின் உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்றால் பாஜக மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றவிடாமல் தடுப்பது முக்கியம். அதற்கு ஏற்றவாறு எங்களது செயல்பாடுகள் இருக்கும். இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.