மாநில உரிமைகளுக்களை பறிக்கும் வகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழுவை தன்னிச்சையாக அமைத்த ஆளுநரை ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக் கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான 3 பேர் கொண்ட தேடல் குழுவிற்கான பரிந்துரையை மாநில அரசு அளித்தது. அதன்மீது விளக்கம் கோரிய ஆளுநருக்கு மாநில அரசு விளக்கம் அளித்தது. இருப்பினும், மாநில அரசின் பரிந்துரை, விளக்கத்தை புறக்கணித்துவிட்டு, வழக்கத்திற்கு மாறாக 4 பேர் கொண்ட குழுவை ஆளுநர் அறிவித்துள்ளார். யுஜிசி பிரதிநிதி என்று பீகாரை சேர்ந்த ஒருவரை 4வது உறுப்பினராக நியமித்துள்ளார்.
இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒருபகுதியாக சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எஸ்.எஃப்.ஐ மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்ரவர்த்தி தலைமையில் மாணவர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவப்படத்தை எரித்து முழக்கமிட்டனர்.