3 மாதங்களுக்கு மேல் கருவுற்ற பெண்களுக்கு பணி நியமனம் இல்லை என்ற உத்தரவை எஸ்.பி.ஐ. வங்கி ரத்து செய்துள்ளது.
எஸ்.பி.ஐ. வங்கியில், புதிய பணியாளர் சேர்க்கை மற்றும் பதவி உயர்விற்கான மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகளை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் வெளியிட்டிருந்தது.
மருத்துவ தகுதி தொடர்பான அந்த சுற்றறிக்கையில், மூன்று மாதத்திற்கு மேல் கருவுற்ற பெண்கள் பணியில் சேர தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இது போன்றவர்கள் குழந்தை பெற்ற பின் 4 மாதம் கழித்தே பணியில் சேர தகுதியுள்ளவர்கள் என்றும் புதிய விதிகளில் குறிப்பிட்டிருந்தது. பதவி உயர்விற்கும் இதே விதி பொருந்தும் என வங்கி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த விதிகள் பெண்கள் உரிமையை பறிக்கும் செயல் என ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இது அரசியல் சாசனத்தின் பாலின சமத்துவத்திற்கு எதிரான அப்பட்டமான மீறல் உடனே இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டுமென சு.வெங்கடேசன் எம்பி, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தார். சமூக ஆர்வலர்களும் பலரும் இந்த உத்தரவுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
இவ்விதி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டு கடும் எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், 3 மாதத்திற்கு கருவுற்ற பெண்களுக்கு பணி இல்லை என்ற உத்தரவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து எஸ்.பி.ஐ. வங்கி தனது உத்தரவை ரத்து செய்திருக்கிறது.