சென்னை,அக்.14- ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி செய்த பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிந்தர் பால் சிங். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவல கத்தில் கொடுத்த புகார் மனுவில் , என்னுடைய தொழில் நிறுவன வளர்ச்சிக்கு ரூ.70 கோடி கடன் பெற்றுத் தருவதாக வும், அதற்கு பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் என ரூ.1.40 கோடி வாங்கி, ஒரு கும்பல் மோசடி செய்துவிட்டது. ரூ.70 கோடிக்கான போலி வரை வோலையை காட்டி என்னை மோசம் செய்து விட்டனர். அந்த மோசடி கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, என்னிடம் பறித்த ரூ.1.40 கோடி பணத்தை மீட்டுத் தரும்படி அந்த மனுவில் அவர் கோரியிருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜசேகர் (65), சென்னை போரூர், ஆலப்பாக்கம் ரஜிதா (36), கே.கே.நகரைச் சேர்ந்த ராமு (36), வளசரவாக்கம் தசரதன் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 1 லட்சம் ரொக்கப்பணம், 2 கார் மற்றும் போலியான ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட வர் ராஜசேகர். இவர் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டதாக கூறப்படுகிறது. தற்போது பாஜக மாநில விவசாய அணி நிர்வாகியாக இருப்ப தாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள் ளது.