tamilnadu

img

துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படி: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சென்னை:
ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர் படி வழங்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் தோழர் சட்ட மையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத் தைக் கொண்டு வந்தது. இந்த திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்ற போதும், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்குவது இல்லை. கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி துப்புரவுத் தொழிலாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபடும் போது மரணமடைய வாய்ப்பு உள்ளது.

ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லை. துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.80 மட்டுமே வழங்கப்படுகிறது. இடர்படி வழங் கக் கோரி மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அனுப்பினேன். இந்த கோரிக்கையைப் பரிசீலித்த மத்திய அரசு, தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்க தமிழக நகராட்சி நிர்வாக ஆணையருக்கு பரிந்துரைத் தது. ஆனால் இந்த பரிந்துரை மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்க வேண்டும். தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் வரும் அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

;