சென்னை:
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை அடைத்து 2 மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டதாக 450 ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கேரளாவில் மதுபான கடைகளுக்கான நடைமுறைகளை தமிழகத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக அனைத்து டாஸ் மாக் ஊழியர்கள் சங்கங்களும் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், ஆகஸ்டு 25 செவ்வாயன்று 2 மணி நேரம் மதுக்கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஊழியர்களை பழிவாங்கும் டாஸ்மாக் நிர்வாகம் சென்னையில் 25 பணியாளர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 450 பேரை குடோன்களுக்கு இடமாற்றம் செய்துள்ளது.