tamilnadu

img

இடஒதுக்கீடு விவகாரம்: தமிழக ஆளுநருக்கு வழிகாட்டுக! அமித் ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்....

சென்னை:
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி தமிழக ஆளுநருக்கு வழிகாட்ட வேண்டும் என, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நாடாளுமன்ற திமுக 
குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புகளில் 7.5 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவின் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக  (அக். 27) கடிதம் எழுதியுள்ளனர்.அதன்படி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம்:

"கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள், மருத்துவக் கல்வி பெறுவதற்கும், பெருமைமிக்க இந்த நாட்டின் எதிர்கால மருத்துவர்களாக வருவதற்கான கனவு நனவாவதற்கும், தடையாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் திமுக வலியுறுத்தி வருவதை, உள்துறை அமைச்சராகிய தாங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன்.மறுபுறம், 2017 - 2018 கல்வியாண்டு முதல் நீட் தேர்வு, அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை ஆராய்வதற்காக முன்னாள் உயர் 
நீதிமன்ற நீதிபதி கலையரசன் உள்ளிட்ட மூத்த வல்லுநர்கள் அடங்கிய கமிட்டியை தமிழ்நாடு அரசுஉருவாக்கியது.அந்தக் கமிட்டியின் பரிந்துரைகளைத் தொடர்ந்து 'மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கான தகுதித் தேர்வாகக் கருதப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது' என்று மாநில அரசு முடிவெடுத்தது, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே சமத்துவத்தைக் கொண்டுவருவதற்கான நியாயமான செயலாகும்.

மேற்கண்ட முடிவின் அடிப்படையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான 'மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளங்கலைப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020', 15.09.2020 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.தற்போது மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு சேர்க்கை நடைமுறைகள் தொடங்கிவிட்டன.

எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் இன்னமும் கால தாமதம் செய்வது மருத்துவக் கல்வியைக் கற்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குவதோடு, இந்தக் கல்வியாண்டைப் பொறுத்தவரையில் அந்த மசோதாவின் நோக்கம் பயனற்றதாகிவிடும்.எனவே,  மருத்துவப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020'-க்கு ஒப்புதல் அளிக்கும் படி தமிழக ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சர் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்".இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.