திருவனந்தபுரம், மே 17-கேரளத்தின் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.66)வளர்ச்சியை முன்னுரிமை பட்டியலிலிருந்து நீக்கிய நடவடிக்கைளை கைவிடுமாறு மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு எழுதிய கடிதத்தில்கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மே 2ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு மூலம் கேரளத்தின் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப்பணிகளை முன்னுரிமைக்கான ஹை-1 பிரிவிலிருந்து ஹை-2 பிரிவுக்கு தரம் தாழ்த்தியுள்ளது. மே 9இல் மற்றொருஅறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டபோதிலும், முந்தைய அறிவிப்பை திரும்ப பெறவில்லை. ஹை-2 பிரிவின் கீழ் வரும் திட்டங்களுக்காக மீண்டும் ஒப்புதல் பெற வேண்டும் என்கிற புதிய அறிவிப்பே அதில் உள்ளது.தேசிய நெடுஞ்சாலை பணிகளை முழுமையாக்க கேரளம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியது வரும் என்பதற்கான அறிகுறியைபுதிய அறிவிப்பு தெளிவுபடுத்தியுள்ளது. முந்தைய அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெறும் என்கிற நம்பிக்கை ஊடக செய்திகளைத் தொடர்ந்து ஏற்பட்டது. ஆனால், புதிய அறிவிப்பு கேரள மக்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. கேரளத்தில் என்.எச் 66இன் வளர்ச்சி மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தில் உட்படுத்தி உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. என்.எச் 66இல் வரும் அனைத்து நடவடிக்கைகளுக்குமான திட்ட அறிக்கை (டிபிஆர்) விரைவாகவும், விளக்கமாகவும் தயாரிக்கும் பணி2016இல் துவக்கப்பட்டது. இந்த செயல்முறைகள் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. நிலம் எடுப்புக்கான 3-ஏ அறிவிப்பு 90 சதவிகிதத்தை கடந்துள்ளது. 3-டி அறிவிப்பு 68 சதவிகிதத்துக்கும் கூடுதலாக முழுமை பெற்றுள்ளது. இந்த நிலையில் நில எடுப்பைநிறுத்தி வைப்பது கேரள மக்களின்எதிர்பார்ப்பை புரட்டிப் போடும் செயலாகும். கேரளத்தின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு நில எடுப்பில் அரசுடன் ஒத்துழைத்த ஏராளமான மக்களின் சமூக-பொருளாதார வாழக்கையை தேசிய நெடுஞ்சாலைஆணையத்தின் நடவடிக்கை சிக்கலாக்கிவிடும். கேரளத்தில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கும் முடிவு மக்களின் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அறிவிப்புகளை திருத்தவும் நில எடுப்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைத்துக்கு உத்தரவிடுமாறு மத்திய அமைச்சரை கேரள முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.