tamilnadu

img

கைது செய்த சாம்சங் தொழிலாளர்களை விடுவித்திடுக! அரசுக்கு தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை,அக்.9- தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் தமிழர் கூட்டமைப்பு ஒருங்கிணை ப்பாளருமான தி.வேல்முருகன் எம்எல்ஏ அக்டோபர் 9 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளுக்கு துணை நிற்காமல், அவர்களின் போராட்டத்தை காவல்துறை மூலமாக ஒடுக்கி, ஆலை நிர்வாகத்துக்கு துணை போகும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏமாற்றமளிக்கிறது.

உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு நிற்பது என்பது  ஏற்புடைய செயல் அல்ல!

சாம்சங் தொழிலாளர் சங்கத்திற்கு பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டுமென்ற போராட்டம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம்  மட்டுமல்ல; அரசியல் சட்டத்தை பாதுகாக்கக் கூடிய போராட்டமாகும். அறப்போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதைக் கைவிட்டு, சாம்சங் தொழிலாளர் சங்கத்திற்கு பதிவுச் சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சங்கத்தோடு சாம்சங் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.

கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.