tamilnadu

46 மையங்களில் மறுவாக்குப் பதிவு?

சென்னை, மே 8-தேனி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு, “தேனிக்கு 50 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஈரோட்டிற்கு 20 வாக்குப்பதிவு எந்திரங்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.தலைமை தேர்தல் ஆணையம் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடு மேயானால் அதற்கு தயாராக இருக்கும் வகையில் எந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாகு கூறினார். மறுவாக்குப்பதிவு நடக்குமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் தமிழகத்திலுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் எந்திரங்களின் முழு தகவல்களை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலன்று மாதிரி வாக்குப்பதிவு நடத்திய போது, 46 மையங்களில் தவறு நடந்துள்ளதாகவும், இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த 46 மையங்கள், ஈரோடு, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மற்றும் 15 தொகுதிகளில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தேனிக்கு வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக திமுகவுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.