சென்னை:
ஆசிரியர் பணிநியமனத்திற்கான வயதுவரம்பு குறைப்பு அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிவலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பைப் பொதுப்பிரிவினருக்கு 40 எனவும் இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 எனவும் அறிவித்து சமீபத்தில் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இவ்வாணை ஆசிரியர் பயிற்சி முடித்துப் பணி நியமனம் கிடைக்காமல் பல ஆண்டுகளாக ஆசிரியர் பணியைஎதிர்நோக்கிக் காத்திருக்கும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.இவ்வாணை வெளியானதை அறிந்துஆசிரியர் பயிற்சி முடித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையின்றித் தவிக்கும் பலலட்சம் பேர் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். இவ்வாணையின் மூலம் என்றாவது ஒரு நாள் ஆசிரியர் பணியில் சேர முடியும் என்ற அவர்களது நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் ஆசிரியர் பணி நியமனம் பெறுவதற்கான வயது வரம்பும் உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். அது தான் நியாயம். தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டு காலமாக ஆசிரியர்கள் நியமனம் என்பது நடைபெறவில்லை. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி என்பது ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் தமிழக அரசு கூறிவிட்டது. இச்சூழலில் ஆசிரியர் பணி நியமனவயதை குறைத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற்று, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டு காலம் பணிவாய்ப்புக் கிடைக்காத 40 வயதைக் கடந்தவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது.
இந்த அரசாணையின் மூலம் லட்சக்கணக்கான ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களின் எதிர்கால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தமிழக அரசு உணர்ந்து வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.