சென்னை,டிச.22- பல நூற்றுக்கணக்கான செங்கொடிகள் காற்றில் அசைந்தாட, உழைக்கும் மக்களின் கரங்கள் உயர, தோழர்களின் முழக்கங்கள் அந்த மண்ணையே அதிர வைத்தன. தேன்கனிக்கோட்டையின் தெருக்கள் சிவப்பாக மாறின. ஆயிரக்கணக்கான தோழர்களின் அணிவகுப்பு பேருந்து நிலை யத்தை நோக்கி நகர்ந்தபோது, அந்த ஊரே புரட்சிகர உணர்வால் கிளர்ந்தது.
நீண்டகாலமாக செங்கொடி இயக்கத்தின் கீழ் போராடி, பல இடர்பாடுகளை கடந்து வந்த இளம் தலைவர் புருஷோத்தம ரெட்டியின் தலைமையில் பொதுக்கூட்டம் தொடங்கியது. மார்க்சிஸ்ட் கட்சி யின் தளி ஒன்றிய செயலாளர் ஆர். நடராஜன், மூத்த தலைவர் டி.எஸ். பாண்டியன் ஆகியோரின் முன்னி லையில் கூட்டம் பொலிவுற்றது.
மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணனின் உரை, மக்களின் இதயங்களை தொட்டது. “காவேரி வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரில் 165 கிராமங்களின் மக்க ளை வீடற்றவர்களாக்க முயலும் அரசின் முயற்சிகளை முறியடித் தோம்! விவசாயிகள் சங்கம், பட்டி யலின மக்கள், மலைவாழ் மக்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இன்னும் பல போராட்டங்கள் முன்னே இருக்கின்றன!” என்று அவரது குரல் எதிரொலித்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர் பி. டில்லிபாபு, மாவட்ட செய லாளர் சி. சுரேஷ், தேன்கனிக் கோட்டை வட்டத்தின் மூத்த தலை வர் பி. நாகராஜரெட்டி, தர்மபுரி மூத்த தலைவர் பி.இளம்பரிதி ஆகி யோரின் உரைகள் போராட்ட உண ர்வை மேலும் தீவிரப்படுத்தின.
“உத்தனப்பள்ளி, சூளகிரி பகுதிகளில் சிப்காட் பெயரில் விவ சாய நிலங்களை பறிக்கும் கொள்ளையை தடுப்போம்! கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிலாளர் சுரண்டலை முறியடிப்போம்! உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவோம்!” என்ற கே.பாலகிருஷ்ணனின் முழக்கம் கூட்டத்தில் எழுச்சியை ஏற்படுத்தியது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான ஆர். சேகர், ஜி.கே. நஞ்சுண்டன், கே. மகாலிங்கம், சி. பிரகாஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சி.பி. ஜெயராமன், லெனின் முருகன் ஆகியோர் முன்னணியில் இருந்தனர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் இருதயராஜ், அனுமப்பா, சீனிவாசன் உள்ளிட்டோரும், இடைக்குழு செயலாளர்களான கிருஷ்ணகிரி பெரியசாமி, ஓசூர் மாநகர் நாகேஷ் பாபு, ஓசூர் ஒன்றியம் ஆர்.கே. தேவராஜ், கெலமங்கலம் ராஜா, தளி நடராஜன், பர்கூர் சீனிவாசன், போச்சம்பள்ளி சாமு, ஊத்தங்கரை சபாபதி, சூளகிரி முருகன் ஆகியோரின் பங்கேற்பு கூட்டத்திற்கு மேலும் வலிமை சேர்த்தது.
“காவிக் கூட்டத்தினரின் மதவெறி அரசியலையும், பாஜகவின் தொழிலாளர் விரோத கொள்கைகளையும் தோற்கடிப்போம்! கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத இந்தியாவுக்கு எதிர்காலமே இல்லை!” என்ற மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனின் அறைகூவல் வரலாற்றின் உண்மையை பறைசாற்றியது.
டிசம்பர் 22 ஞாயிறன்று தேன்கனிக்கோட்டையின் வீதிகளில் பதிந்த 2000-க்கும் மேற்பட்ட செம்படையினரின் காலடிகள், புதிய போராட்டப் பாதையை வகுத்தன. செங்கொடிகள் பறந்த அந்த பகல் பொழுது, தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியது. மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டப் பயணம் தொடர்கிறது - மக்களோடு, மக்களுக்காக, மக்களின் வெற்றி வரை!