சென்னை, டிச. 12-
ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயு) மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
ரயில்வேயில் செயல்படும் தொழிற்சங்கங்களின், தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் 2024 டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலில் 30 சதவிகிதம் வாக்குகள் பெறும் சங்கத்திற்கு அங்கீகாரம் என்ற விதியின் அடிப்படையில், சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு), சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன், சதர்ன் ரயில்வே எம்ப்ளாயிஸ் சங் உள்ளிட்ட 5 சங்கங்கள் போட்டியிட்டன.
தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சார்பில் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் டிஆர்இயு, சிஐடியு தலைவர்கள், நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தெற்கு ரயில்வே முழுவதும் ரயில்வே தொழிலாளர்களிடம், தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தனர்.
தொழிலாளர்களின் பேராதரவு
பிரச்சாரத்தின் போதே தொழிலாளர்கள் மத்தியில் டிஆர்இயு-வுக்கு கணிசமான ஆதரவுத் தளம் இருந்தது. மேலும் பிறமொழி பேசும் ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், அவர்களின் கோரிக்கைக்காகவும் டிஆர்இயு போராடியதால், அவர்களின் ஆதரவும் டிஆர்இயு-விற்கு கிடைத்தது.
டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் நடைபெற்ற தேர்தலில் 88.91 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
107 வாக்குகள் மட்டுமே வித்தியாசம்
இந்த தேர்தலில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் 12.12.2024 அன்று அந்தந்த டிவிசன் அளவில் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையில் சிஐடியுவுடன் இணைக்கப் பட்ட சங்கமான தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் 26 ஆயிரத்து 151 வாக்குகளும், எஸ்ஆர்எம்யூ 26 ஆயிரத்து 258 வாக்குகளும் பெற்றன. 107 வாக்குகள் மட்டுமே எஸ்ஆர்எம்யூ-விற்கும், டிஆர்இயூ-விற்கும் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சங்கம் அங்கீகாரம் பெற 22 ஆயிரத்து 996 வாக்குகள் பெற வேண்டும். ஆனால், அதற்கும் அதிகமாக டிஆர்இயு வாக்குகளைப் பெற்றுள்ளதால் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பணப் பட்டுவாடா
மாற்று சங்க தலைமையான ஏஐஆர்எப், எஸ்ஆர்எம்யு சார்பில் ஜி-பே மூலம் தொழிலாளர்களுக்கு பணம் அனுப்பினர். 2,000 ரூபாய் 1,000 ரூபாய், சில இடங்களில் 500 ரூபாய், பிரியாணி டோக்கன், பாட்டில் என பல்வேறு பொருட்களும், ஐஎன்டியுசி, என்எப்ஐஆர், எஸ்ஆர்இஎஸ் சார்பில் 3 கிராம் வெள்ளி நாணயம், வெள்ளிப் பிள்ளையார், பிரியாணி டோக்கன் என வாரி வழங்கினாலும், தொழிலாளர்கள் அதைப் புறக்கணித்து டிஆர்இயு-விற்கு வாக்களித்துள்ளனர்.
தோழமை அமைப்புக்களின் ஆதரவு
டிஆர்இயு-வின் வெற்றி என்பது தொழிலாளர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே அமைந்துள்ளது. இந்த வெற்றிக்குப் பாடுபட்ட அனைத்து ரயில்வே தொழிலாளர்களுக்கும், கூட்டணி அமைப்புகளான ஆர்எல்எல்எப், ஏஐஎஸ்எம்ஏ, ஏஐஎல்ஆர்எஸ்ஏ, எஸ்ஆர்இஏ, ஏஐஆர்எஸ்ஏ, ஏஐஆர்சிசிஏ, பிஆர்இஎஸ், ஏஐஜிசி, எஸ்ஆர்பிடபிள்யுடிஏ (RLLF, AISMA, AILRSA, SREA, AIRSA, AIRCCA, BRES, AIGC, SRPWDA) ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், சிஐடியு மாநில நிர்வாகிகள், மாவட்டகுழு தலைவர்கள் செயலாளர்கள் அனைவருக்கும் டிஆர்இயு நன்றி தெரிவித்துள்ளது.
குறிப்பாக மதுரை மாவட்ட சிஐடியு செயலாளர் லெனினுக்கும், மதுரையில் 3 நாட்களும் அராஜகத்தை எதிர்த்து களத்தில் நின்ற அனைவருக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும் டிஆர்இயு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த ரயில்வே தொழிற்சங்க இயக்கத்திற்கும் மிகப்பெரிய உத்வேகத்தை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கிறது என்று டிஆர்இயு தலைவர் ஜி. சுகுமாறன், பொதுச்செயலாளர் வி. அரிலால், செயல் தலைவர் அ. ஜானகிராமன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
வெற்றிக் கொண்டாட்டம்
13 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் டிஆர்இயு பெற்றுள்ள வெற்றியை தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை லோகோ பணிமனை, கேரஜ் பணிமனை, பனந்தோப்பு ரயில்வே காலனி, பாலக்காடு டிவிஷன், திருவனந்தபுரம் டிவிஷன்களில் ரயில்வே ஊழியர்கள் பட்டாசு வெடித்தும் சக ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கியும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
தொழிலாளர்களுக்கு பாராட்டு
டிஆர்இயு-வின் வெற்றி, தொழிலாளர்களுக்கு கிடைத்த வெற்றி எனவும், இந்த வெற்றிக்குப் பாடுபட்ட அனைத்து ரயில்வே தொழிலாளர்களுக்கும், சிஐடியு ஊழியர் களுக்கும், பொதுமக்களுக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக டிஆர்இயு தலைவர் ஜி. சுகுமாறன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஜி. சுகுமாறன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், ரயில்வே தொழிலாளர்களின் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தும் புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட வேண்டும்; தனியார்மயத்தைக் கைவிட வேண்டும், மக்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும், வரிப்பணத்தாலும் உருவாக்கப்பட்ட ரயில்வேயை தனியார் மயப்படுத்தக்கூடாது; ரயில்வேயில் ஆட்குறைப்பு செய்யக்கூடாது; புதிதாக ரயில்வேயில் ஆட்கள் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தொழிலாளர்களின் நெடுநாள் கோரிக்கை களை முன்வைத்து தெற்கு ரயில்வே முழுவதும் டிஆர்இயு பல்வேறு கட்டப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், உண்ணாவிரதங்கள், மாதக்கணக்கில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் என தொடர்ச்சியாக ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளை கையிலெடுத்து இயக்கங்கள் பல நடத்தி வெற்றிகண்டது. தற்போது தொழிலாளர்களின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.