tamilnadu

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு உடனே பணம் வழங்குக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

கள்ளக்குறிச்சி, ஜூன் 3-  விவசாயிகளிடமிருந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களுக்கு அன்றே பணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர்கள் டி.எம்.ஜெய்சங்கர், ஏ.வி.ஸ்டாலின்மணி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;  கோடை காலத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. எனவே அனைத்து பகுதிக்கும் தட்டுப்பாடின்றி  குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் தினசரி சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் நீண்ட நாட்களாக சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர போக்குவரத்து செலவுகளை அரசே ஏற்க வேண்டும்.

சின்னசேலம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 75 குடும்பங்களுக்கும் குடிநீர் பிரச்சினையை நீக்கி அரசின் உதவி மற்றும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து அட்டை கிடைக்காமல் ஏராளமானோர் உள்ளனர். முறைசாரா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களும் உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 30 அன்று வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இவர்களுக்கு அனைத்து உணவுப் பொருட்களும் இலவசமாக வழங்க வேண்டும். பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உத்வித் தொகை வழங்க புரோக்கர்கள் மூலம் மனுவிற்கு 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆதார் எண் பதிவேற்றம் செய்ய 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.  எனவே மாவட்ட அளவில் உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டத்தின் அடிப்படையில் தியாகதுருகம் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம்  மார்ச் 31ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை வழங்க ஒப்புக் கொண்டும் இதுவரை வழங்கவில்லை. 

எனவே கரும்பு பாக்கித் தொகை முழுவதையும் விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும். இந்த ஆலையில் பணி புரியும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை ஊதியத்தை பெற்றுத்தர  நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் விலை பொருட்களுக்கு பொதுமுடக்க காலத்தில் உடனே பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.