சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு நல விடுதி மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வாலிபர்சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் கொரோனா பேரிடர் காலத்தில் இயங்காத நிலையில், பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தமிழகத்தில் 2019-2020 கல்வி ஆண்டில் மட்டும் அரசுபழங்குடியினர் உண்டு உறைவிட 308 பள்ளிகளில் 24,931 பேரும், ஆதிதிராவிடர் நலத்துறை 1,324 விடுதிகளில் 98,639 பேரும், அரசுபழங்குடியினர் நலத்துறை 43 விடுதிகளில் 2,132 பேரும், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட 7 பள்ளிகளில் 1,553 பேரும் பயின்றுவருகின்றனர். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நல விடுதிகள் 973 உள்ளன.ஏறத்தாழ ஒட்டுமொத்தமாக தமிழக அரசினுடைய நல விடுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வறுமையின் காரணமாகமாணவர்களின் கல்வி நலன் கருதி திறக்கப்பட்ட இந்த விடுதிகள் மூலம் பயன் பெற்று வந்தவர்களின் ஆரோக்கியமான உணவு என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அரசு ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல விடுதிகளிலும், உண்டு உறைவிட பள்ளிகளிலும் சென்ற ஆண்டு 2019-20 பயின்று வந்தமாணவர்கள் அனைவருக்கும் உணவு பொருட்கள் கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.