tamilnadu

img

விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் ஓயாது.... மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை:
“விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் இந்தப் போராட்டங்கள் ஓயாது; அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் மத்திய பா.ஜ.க.அரசு நிறைவேற்றியுள்ள மூன்று சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் - அதற்கு துணை போகும் ஆளும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், காஞ்சிபுரம் – கீழம்பி கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஏழைத்தாயின் மகனும் விவசாயியும்
மத்தியில் ஒருவர் பிரதமராக இருக்கிறார். அவர் தன்னை ‘ஏழைத் தாயின் மகன்’ என்று சொல்லிக் கொள்கிறார். இந்த ஏழைத்தாயின் மகன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான இந்திய மக்கள் ஏழைகள் ஆனார்கள். புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஏழைத்தாயின் மகன்.மாநிலத்தில் ஒருவர் முதலமைச்ச ராக இருக்கிறார். அவர் தன்னை ‘விவசாயி’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் விவசாயிகளின் வாழ்க்கையேபறிபோய்க் கொண்டிருக்கிறது. ஏழைத் தாயின் மகனும், இந்த விவசாயியும் சேர்ந்து ஏழை மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த நன்மையும் செய்யவில்லை; தொடர்ந்து விவசாயிகளுக்குவிரோதமான செயல்களை, கெடுதல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை போட்டி போட்டுக் கொண்டு செய்கிறார்கள்.

பஞ்சாப்பில் ஏன் எதிர்க்கிறார்கள்
மூன்று சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது.  இந்தச் சட்டத்தால் விவசாயிகள் பின்தங்கிவிடுவார்கள். நிலத்தில் இருந்து துரத்தப்படுவார்கள். அதனால்தான் அந்தச் சட்டங்களை எதிர்க்கிறோம். தமிழகம் மட்டுமல்ல; பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சிரோமணி அகாலி தளம் இந்தச் சட்டங்களை எதிர்த்து கூட்டணியில் இருந்து விலகிவிட்டது.   பஞ்சாப் மாநிலத்தில் 50 ஆண்டுகளாக உருவாக்கி வைத்துள்ள விவசாயக் கட்டமைப்பு அழிந்து விடும் என்று அவர்கள் கூறிஎதிர்க்கிறார்கள்.  இந்தச் சட்டத்தை எதிர்ப்பது நாம் மட்டுமல்ல; அவர்களுடன் கூட்டணி வைத்திருந்த கட்சியே எதிர்க்கிறது.மத்திய அரசு எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் தி.மு.க.வும் - தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளும்எதிர்க்கின்றன என்று சிலர் தவறான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அதைப்பற்றிக் கவலையில்லை. மக்களுக்கு விரோதமான சட்டம் எதுவாக இருந்தாலும் அதனைக் கடுமையாக எதிர்ப்போம்.பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தில்லி எனப் பல்வேறு மாநிலங்களில் விவசாய அமைப்புகள் அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. நாடு முழுவதும் இந்தச் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் விவசாயிகள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்துகிறார்கள். கர்நாடகாவில் விவசாயிகள் சாலை மறியல் செய்கிறார்கள். 34 விவசாய சங்கங்கள் சேர்ந்து போராடி வருகிறார்கள்.

அரியானாவில் விவசாயிகள் ரயில் மறியல் செய்து வருகிறார்கள். தண்டவாளத்தில் சமையல் செய்து சாப்பிட்டும், தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியும் போராட்டத்தை விவசாயிகள் நடத்துகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் 31 விவசாய அமைப்புகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர். பேருந்துகள் இயங்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்தி உள்ளார்கள். கேரளாவில் ஆளுநர் மாளிகை முன்பு மறியலும்,ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவே இந்தச் சட்டத்துக்கு எதிராக கொந்தளித்து போராட்டத்தை நடத்தி வருகிறது.

கேரள அரசு வழியில்...
வேளாண் சட்டத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய கேரள அரசுதயாராகி வருகிறது. பக்கத்தில் இருக்கும் மாநிலம் நீதிமன்றத்துக்குச் செல்வதைப்போல தமிழக அரசும் நீதிமன்றம் செல்லவேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அதைச்செய்யத் தமிழக அரசு முன்வரவில்லை. தமிழக அரசு நீதிமன்றம் செல்லாவிட்டால் தமிழக மக்களின் சார்பாகஎதிர்க்கட்சியான நாங்கள் நீதிமன்றத் துக்குச் செல்வோம்.இந்த மூன்று சட்டங்களும் தவறானது என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்ததோடு மட்டுமின்றி; இதை எதிர்த்து போராடுகிற வர்களைக் கைது செய்யமாட்டோம் என்கிறார். தில்லியில் விவசாயிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ள தோடு - சேர்ந்து போராடுகிறது. மேற்குவங்கத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்து வருகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் ஒருவர் இருக்கிறார். ‘விவசாயி’ என்று சொல்கிற முதலமைச்சர் இருக்கிறார். கூனிக்குறுகி மண்புழுபோல வளைந்து நெளிந்து பதவியைப் பெற்றவர். கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் இந்தச் சட்டங்களை ஆதரிக்கிறார். இந்த மூன்று சட்டங்களை ஆதரித்து மக்களவையில்  - மாநிலங்களவையில் வாக்களித்ததோடு மட்டுமின்றி; இந்தச் சட்டத்தை முழுவதுமாக ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி அறிக்கை விடுத்துள்ளார்.‘மக்களவையிலும் மாநிலங்களவை யிலும் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் எதிர்க்கருத்துகளுக்கு இடமே தராமல், கொரோனா காலத்தில் அவசர அவசரமாக இந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?  
விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன் என்றார் மோடி.  ஆனால் இவரது ஆட்சியில் தான் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கின்றன.விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்ன?

மத்திய அரசு செய்யப்போகும் உதவிஎன்ன? சலுகைகள் என்ன? கடன் தரப்போகிறதா? மானியம் உண்டா? அதைப்பற்றி எதுவும் இந்தச் சட்டங்களில் கிடையாது. இந்தச் சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் பயன்பெறும். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

                                                                                                                                                                             ****************

ஒரே மேடையில்  விவாதிக்க அதிமுக தயாரா? சென்னை ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி

அம்பத்தூர்:
வேளாண் சட்டம் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க அதிமுக முதல்வரும், வேளாண் துறை அமைச்சரும் தயாரா என சென்னை ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

வேளாண் விளை பொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் ஒப்பந்த பாதுகாப்புச் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகிய 3 சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் திங்களன்று (செப். 28) தமிழகம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், இது அதிமுக அரசுக்கும், அதற்கு எஜமானனாக இருக்கக் கூடிய பாஜக அரசுக்கும் சாவு மணி அடிக்கும் ஆர்ப்பாட்டமாகும். எடப்பாடி அரசுக்கு நாம் கூற வேண்டியது விவசாய சட்டங்கள் கடந்த ஜூன் மாதம் அவசரச் சட்டங்களாக பிறப்பிக்கப்பட்டன. அதையொட்டி சமீபத்தில் நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் அந்த சட்டங்களை முழுமையான விவாதத்திற்கு உட்படுத்தாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டன. மோடி அரசு எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் மாநிலங்களவையில் அராஜகமாக அந்த சட்டங்களை நிறைவேற்றியது.  சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டங்களை ஆதரிக்கக் கூடாது என அதை எதிர்த்து குரல் கொடுத்தனர்.

மோடியே அந்த சட்டத்தை கடந்த 21ஆம் தேதிதான் மக்களவையில் நிறைவேற்றுகிறார். ஆனால் அதற்கு முன்பே அவசர அவசரமாக தமிழக முதல்வர் எடப்பாடி 16ஆம் தேதியே நிறைவேற்றுகிறார். அப்படியென்றால் தமிழகத்தில் நடைபெறுவது அம்மாவின் ஆட்சியா அல்லது மோடியின் ஆட்சியா?

மோடி, அமித்ஷாவின் காலைப் பிடித்து நீங்கள் ஆட்சியிலே நீடிக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளையும், தமிழக மக்களையும் காவு கொடுக்கிற ஒரு சட்டத்தை நிறைவேற்றி யிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எதிரான மோசமான ஆட்சிதான் தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  வேளாண் சட்டங்களோடு மின்சார சட்ட மசோதா 2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை 2020 ஆகியவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்துப் பாருங்கள்; இனி விவசாயம் என்பது விவசாயிகளிடம் இருக்காது, விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றக் கூடிய அரசாக மோடி அரசு உள்ளது. தொலைத்தொடர்பு, வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே போன்றவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததைப் போல, கோடிக்கணக்கான விவசாயிகளின் விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள்.எனவேதான் சமூக அக்கறையோடு விவசாயிகளையும், விவசாயத்தையும், மக்களையும் காப்பாற்ற நாம் போராட்டக் களத்திலே இறங்கியுள்ளோம். இந்த சட்டங்களை வாபஸ் பெறும் வரை, போராட்டம் ஓயாது.இவ்வாறு அவர் பேசினார்.

கே.எஸ். அழகிரி
வடசென்னை வைத்தியநாதன் பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். அழகிரி கண்டன உரையாற்றினார். அவர் தம் உரையில், பாஜகவின் இந்த மக்கள் விரோத வேளாண் திருத்தச் சட்டங்களை பாஜகவின் முன்னோடியான ஆர்எஸ்எஸ் அமைப்பின் விவசாயப் பிரிவு கூட இதனை கடுமையாக எதிர்க்கிறது. அந்த அளவிற்கு படுமோசமான ஆபத்துக்களை உள்ளடக்கிய சட்டதிருத்தமாகும். துண்டு நிலத்தை வைத்து விவசாயம் செய்யும் ஏழை விவசாயிகளை கருவறுக்கும் வேலையை பாஜக செய்துவருகிறது. பதுக்கலை உருவாக்கக்கூடிய ஒப்பந்த விவசாயம் இந்தியாவில் சரிபட்டுவராது என்றார்.

பெ.சண்முகம்
செங்கற்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், “அத்தியாவசிய பொருட்களின் திருத்தச்சட்டம் 2020 வெங்காயம், உருளைகிழங்கு எண்ணெய், பருப்புவகைகள், உணவு தானியங்களை அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.இந்த சட்டத்தின் மூலம் பெரும் முதலாளிகள் அத்தியாவசிய பொருட்களை பெருமளவில் பதுக்கிவைப்பார்கள். ஏழை, எளிய மக்கள் அத்தியாவசிய பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாமல்  செயற்கையான தட்டுப்பாடு  ஏற்படுத்தி  இந்திய நாடு முழுவதும் பட்டினிச்சாவை ஏற்படுத்தும் நிலைக்கு அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.சென்னை பெருங்குடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., வள்ளுவர்கோட்டத்தில் திக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா, அஸ்தினாபுரத்தில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், ஆலந்தூரில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்கள், ஒன்றிய, நகர, பேரூர் தலைநகரங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றியத் தலைவர்கள் தலைமையேற்றனர்